மீண்டும் ஆன்லைன் ரம்மியால் ஒரு தற்கொலை.. மசோதா இயற்றி என்ன பயன்?

Siva

வியாழன், 30 மே 2024 (09:36 IST)
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பலர் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் தான் சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி உள்பட ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் மசோதா இயற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த மசோதா இயற்றப்பட்ட பின்னரும் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை தொடர்ந்து வருவதை அடுத்து இந்த மசோதாவால் என்ன பயன் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

மயிலாடுதுறை பெரிய தெருவை சேர்ந்த தினசீலன் என்ற 31 வயது நபர் சுவாமி மலையில் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில் இவரது அறை நேற்று பூட்டி இருந்ததாகவும் நீண்ட நேரமாக அவர் வெளியே வரவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அறையில் சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தினசீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து போலீசார் விசாரணை செய்தபோது தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட தினசீலன் லட்சக்கணக்கான ரூபாயை கடன் வாங்கி ஆன்லைன் ரம்மிகியில் பணத்தை இழந்தார் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் விடுதியில் பணியாற்றியவர்களிடமும் கடன் வாங்கி உள்ளதை அடுத்து அவர் மன வேதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆன்லைன் ரம்மி மசோதா இயற்றினால் மட்டும் போதாது, அந்த செயலிகள் செயல்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் மசோதா இயற்றுவதால் மட்டும் எந்தவித பயனும் இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்