மீட்கப்படுமா அமராவதி? - துயரத்தில் மக்கள்

செவ்வாய், 4 ஜூன் 2019 (20:17 IST)
கரூர் அமராவதி ஆற்றை பாதுகாத்தும்,மீண்டுப்போன ஆற்றை மீட்டு தாருங்கள் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை! ஒரு புறம் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை தொடர்ந்து நிறமாறி வரும் நதி நீரால் சமூக நல ஆர்வலர்களும்  பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர்.
 

கரூர் மாவட்டம் என்றாலே, தமிழகத்தின் மைய மாவட்டம் மட்டுமில்லாது, காவிரி நதியும், அமராவதி நதியும் இணையும் இடம் என்றே கூறலாம், ஆம், கரூர்க்கு அடுத்த திருமுக்கூடலூர் பகுதியில் அமராவதி நதியும், காவிரி நதியும் ஒன்றாக இணைகின்றது.

இந்நிலையில், கர்நாடகா காவிரி நதிநீர் பிரச்சினை ஒரு புறம் இருக்க, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியில் உருவாகி கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் வழியாக திருமுக்கூடலூர் பகுதியில் காவிரி நதியில் கலக்கும் இந்த அமராவதி கரூர் டூ மதுரை பைபாஸ் சாலைக்கு முன்பு வரை கூட தெளிவாக வரும் நிலையில், அதே பகுதியில் உள்ள செட்டிப்பாளையம் தடுப்பணை பகுதியிலும், அதற்கு அடுத்த சுக்காலியூர், கருப்பம்பாளையம், செல்லாண்டிப்பாளையம், திருமாநிலையூர், பசுபதிபாளையம் ஆகிய பகுதிகளின் வழியாக செயல்படும் (திருட்டுத்தனமாக இயங்கும்) சாயப்பட்டறைகளில் இருந்து ரகசியமாக நள்ளிரவில் கலக்கும் சாய கழிவுநீர் முற்றிலும் சுத்தகரிக்கப்படாமல், அப்படியே அமராவதி ஆற்றில் இரவு நேரத்தில் கலப்பதால் காலை முதல் மாலை வரை ஆங்காங்கே பச்சை, மஞ்சள், சிகப்பு, கறுப்பு, ஊதா நிறங்களில் இந்த அமராவதி ஆற்றின் நீர் காணப்படுகின்றது.

இது மட்டுமில்லாமல், கரூர் நகராட்சியில் உள்ள சாக்கடை கழிவு நீரும் அப்படியே சுத்திகரிக்கப்படாமல் 24 மணி நேரமும் இந்த அமராவதி ஆற்றில் நேரிடையாக கலப்பதினால்., மேலும், இந்த புனிதமிக்க அமராவதி ஆறு முற்றிலும் நாசமாகின்றது. இது ஒரு புறம் இல்லாமல், தமிழக முதல்வரின் தலையாய திட்டமான பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்போம் என்பது, கரூர் நகராட்சியை பொறுத்தவரை செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான் இருக்கிறது.

கரூர் அமராவதி ஆற்றின் எந்த புறம் பார்த்தாலும், ஒரே பிளாஸ்டிக் கழிவுகள் தான்,.ஆகையால் பொதுமக்கள், எங்களுக்கு பழைய அமராவதி ஆற்றினை தருமாறும், அதிலாவது எங்கள் சந்ததியினர் வளர உதவிடுங்கள் என்றும் கோரிக்கை விடுத்ததோடு, மேலும் ஆங்காங்கே முற்றிலும் மணல் எடுத்து விட்டதினால், இனி ஆறுகளில் மாசு கலந்த நீர் வந்தாலும் அப்படியே மக்களுக்கு அந்த மாசு கலந்த விஷ நீர் சென்று விடுவதாகவும், ஆகவே கரூர் மாவட்ட நிர்வாகமும், கரூர் நகராட்சி நிர்வாகமும் உடனே போர்கால நடவடிக்கை எடுத்து அமராவதி ஆற்றினை விஷ கழிவுகளில் இருந்து காப்பாற்றி புனிதமிக்க, ஆறாக மீட்டு தருமாறும் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்