மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா.. தேதியை அறிவித்த தளபதி விஜய்..!

Siva

திங்கள், 10 ஜூன் 2024 (10:01 IST)
கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் 10,12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு தளபதி விஜய் பாராட்டு விழா நடத்த போகிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இது குறித்த தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
 
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் 'தளபதி விஜய் அவர்கள் 2024ஆம் ஆண்டு நடந்து நடந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரியில் உள்ள, தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பாராட்ட உள்ளார்.
 
முதற்கட்டமாக 28-06-2024 வெள்ளிக்கிழமை அன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை இராமநாதபுரம், சேலம், சிவகாங்கை, தென்காசி. தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.
 
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 03-07-2024 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம். பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பாராட்டு பெறுகிறார்கள்.
 
தளபதி விஜய் அவர்கள் மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்களும் ஊக்க தொகையும் வழங்கி கௌரவிக்க உள்ளார் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்