உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசுத் தயார் – அமைச்சர் பதில் !

புதன், 17 ஜூலை 2019 (13:27 IST)
உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக இருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் பதவிக்காலம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் தேர்தல் நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.  இதனால் உள்ளாட்சிப் பணிகள் நடக்காமல் முடங்கியுள்ளன. இது குறித்த வழக்கு ஒன்றின் விசாரணையின் போது ‘தமிழகத்தில் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படாததற்கு நிலுவையில் உள்ள வழக்குகளேக் காரணம். மேலும் வார்டு மறுவரையறை வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு எனப் பணிகள் முடியாமல் இருப்பதும் தேர்தல் நடத்துவதில் பிரச்சனையாக உள்ளன. . எனவே தற்போது தேர்தல் நடத்தும் சூழல் தமிழகத்தில் இல்லை. வாக்காளர் பட்டியலை சரிப்பார்த்த பின்னரே தேர்தல் நடத்தப்படும்’ எனத் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்க முடியாமல் உள்ளது. மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி நிதியை பெறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளன. இது சம்மந்தமாக எதிர்க்கட்சிகளின் கேள்விக்குப் பதிலளித்த உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி ‘வார்டு வரையறை செய்யும் பணிகளை தமிழக அரசு செய்து முடித்துள்ளது. அதனால் அரசு தேர்தலை நடத்த தயாராகவே உள்ளது. தமிழகத்துக்கு வரவேண்டிய 12,312 கோடி நிதியில் மத்திய அரசு இதுவரை ரூ. 8,352 கோடி வழங்கி உள்ளது’ எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுசம்மந்தமான வழக்கில் தேர்தல் ஆணையம் அக்டோபர் 31 ஆம் தேதி வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்