பெண்களை அவமதித்தது நாங்களா? நீங்களா? – எய்ம்ஸ் குழுவால் புதிய சர்ச்சை!

புதன், 28 அக்டோபர் 2020 (13:59 IST)
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை புதிய உறுப்பினராக கீழ்பாக்கம் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை துறை தலைவர் சுப்பையா சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு விசிக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மதுரையில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களை மத்திய அரசு இன்று அறிவித்தது. அந்த பட்டியலில் கீழ்பாக்கம் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை தலைவர் சுப்பையா சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுப்பையா சண்முகம் மீது கார் பார்க்கிங் செய்யும் விவகாரத்தில் பக்கத்து வீட்டு பெண்ணுடன் நடந்த சண்டையில் பெண்ணின் வீட்டு முகப்பில் சிறுநீர் கழித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதற்காக அப்போதே பலர் சுப்பையாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அவர் எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதற்கு திருமாவளவன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள எம்.பி ரவிக்குமார் “பெண்ணை துன்புறுத்திய குற்றச்சாட்டில் வழக்கு பதியப்பட்டவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக நியமனம்; இது பெண்களை அவமதிப்பதில்லையா?” என கேள்வி எழுப்பினார்.

முன்னதாக திருமாவளவன் பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாக பாஜக கண்டனம் தெரிவித்த நிலையில், ரவிக்குமார் எம்.பி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்