ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து: வைரமுத்து மன்னிப்புக்கேட்க ஹெச்.ராஜா வலியுறுத்தல்

செவ்வாய், 9 ஜனவரி 2018 (04:16 IST)
பிரபல திரைப்பட கவிஞர் வைரமுத்து நேற்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் பேசினார். தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் வைரமுத்து பேசிய சில கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தது. ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுள் என இரண்டுக்கும் உள்ள வித்தியாசம், ஆகியவை குறித்து அவர் விளக்கிய விதம் ஒருசிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியை தினமணி நாளிதழ் ஏற்பாடு செய்திருந்தது

இந்த நிலையில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய வைரமுத்துவும், இதற்கு தளம் அமைத்து கொடுத்த தினமணியும் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ஆஜா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:

இந்துக்களின் மத உணர்வுகளை திட்டமிட்டு காயப்படுத்துவது என்பது வைரமுத்து போன்றவர்களுக்கு வாடிக்கை. இதற்கு தினமணி களம் அமைத்துக் கொடுத்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. இவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் வைரமுத்து பேசியது விஷமத்தனமானது. ஒரு அநாகரீகமான நபருக்கு தினமணி களம் அமைத்துக் கொடுத்துள்ளது துரதிர்ஷ்டவசமானதும் கண்டிக்கத்தக்கதுமாகும். தினமணி நாளிதழின் தரமும் மரியாதையும் ஒரு நொடியில் குலைந்து போனது. தினமணி நாளிதழ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்