ஆகஸ்டு 5ம் தேதிக்கு பின் நான் யாரென காட்டுகிறேன் - தினகரன் அதிரடி

வியாழன், 29 ஜூன் 2017 (16:31 IST)
செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 60 நாட்கள் அமைதியாக இருப்பேன். அதன் பின் என் நடவடிக்கைகளை பாருங்கள் என பொடி வைத்து பேசியுள்ளார்.


 

 
சிறையிலிருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்த தினகரன் தனக்கான ஆள் சேர்க்கும் வேலையில் இறங்கினார். அவருக்கு இதுவரை 35 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தந்துள்ளனர். ஆனால், தனக்கென ஒரு தனி அணியை அவர் உருவாக்குவதை விரும்பாத சசிகலா, அவரை 60 நாட்கள் அமைதியாக இருக்குமாறு கூறினார். 
 
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் “ கட்சி கட்டுகோப்பாகத்தான் இருக்கிறது. யாரிடம் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. என்னை பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் பேச மறுக்கிறார் என்பதை அவர்தான் கூறவேண்டும். கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தற்போது எந்த அறிவிப்பையும் வெளியிட முடியாத சூழலில் இருக்கிறார். எல்லாவற்றுக்கும் காரணம் என்ன என்பதை 60 நாட்கள் முடிந்து நான் தெரிவிக்கிறேன். 
 
சிலர் தங்களை தலைவர்களாக நினைத்துக்கொண்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். அது விரைவில் சரியாகி விடும். ஆகஸ்டு 5ம் தேதிக்கு பின் என் செயல்பாடுகளை நீங்கள் பாருங்கள். இப்போதைக்கு நான் எதுவும் கூற முடியாது” என அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்