விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு: முதல்வர் பழனிசாமி

புதன், 25 மார்ச் 2020 (19:25 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று இரவு 7 மணிக்கு மக்களிடம் உரையாற்றவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர் மக்களுக்கு வேண்டுகோளாக சில விஷயங்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
 
தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து கொரோனாவை விரட்ட உறுதியேற்போம். 21 நாட்கள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல. உங்களது குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான அரசின் உத்தரவு. பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பொறுப்பான குடிமக்களாக இருந்து சமுதாயத்தைப் பாதுகாப்போம். 
 
பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும். அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே சென்றால் சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன். கடும் சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல் தென்பட்டால் மருத்துவரை அணுகுங்கள். சர்க்கரை, உயர் அழுத்தம் இருப்போர் தவறாமல் மருந்துகளை எடுக்க வேண்டும். முதியோர்களையும் குழந்தைகளையும் கர்ப்பிணி பெண்களையும் கவனமாக பார்த்து கொள்ளவும். கொரோனாவுக்கு எதிராக போராடி தமிழகத்தையும், தமிழக மக்களையும் பாதுகாப்போம். விழித்திரு.. விலகியிரு.. வீட்டிலிரு"
 
கொரோனா நோய் பரவலைத் தடுக்க பொதுமக்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம். மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை வாங்கி சாப்பிடாதீர்கள். மருத்துவ உதவி தேவை எனில் 104 அல்லது 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு ரூ.3,750 கோடி நிதி ஒதுக்கீடு’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்