நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், கரு பிரபாகரன் என்ற நிர்வாகி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பல குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தினார்.
"14 ஆண்டுகளாக நாங்கள் நாம் தமிழர் கட்சியில் உள்ளோம். ஈழ மக்களை காப்பாற்ற கட்சி ஆரம்பித்தோம், தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுத்தோம், பலமுறை சிறை சென்றுள்ளோம்.
14 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவர்களுக்கு எந்தவித மரியாதையும் இல்லை; அவர்கள் நிராகரிக்கப்படுகின்றனர். எங்கள் இளமைக்காலம் முழுவதும் கட்சிக்காகவே சென்றுவிட்டது. நாங்கள் பிச்சை எடுத்து கட்சிக்கு நிதி சேர்த்தால், அந்த நிதியில் சீமான் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்.
சீமானின் வீடு இரண்டரை லட்சம் ரூபாய் வாடகையில் உள்ளது, அவருக்கு 15 வேலையாட்கள் இருக்கிறார்கள். அவை அனைத்தும் கட்சியின் பணம்," என்று அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.