பச்சை புள்ளைன்னு பாக்கல.. அவன சுட்டுக் கொல்லணும்! சிறுமியின் தாயார் கண்ணீர்! - அமைச்சர் ரியாக்‌ஷன் என்ன?

Prasanth K

வெள்ளி, 18 ஜூலை 2025 (15:45 IST)

திருவள்ளூரில் 10 வயது சிறுமி மர்ம நபரால் கடத்திக் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளியை கொல்ல வேண்டும் என சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

 

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பள்ளிக்கு சென்று விட்டு திரும்பிய 10 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

 

ஆனால் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வார காலமாகியும் குற்றவாளி கைது செய்யப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள், காவல்துறை இந்த விவகாரத்தில் தீவிரமாக செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

சிறுமிக்கு ஏற்பட்ட இந்த கொடுமை குறித்து பேசிய சிறுமியின் தாயார் “பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்குச் சென்றபோது, என் மகளை ஒருவன் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான், எனது மகளை வன்கொடுமை செய்த அந்த நபர் யார் என்று காவல்துறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. உடனடியாக அந்த நபரை காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும்.

 

எனது மகளுக்கு ஏற்பட்டதுபோல வேறு யாருக்கும் நிகழக்கூடாது. அந்த நபரை சுட்டுக் கொல்ல வேண்டும்” என கண்ணீருடன் பேசியுள்ளார்.

 

குற்றவாளியை பிடிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் “குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தர காவல்துறை நடவடிக்கை எடுக்கும். குற்றவாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுமிக்கு அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்