திமுக சார்பில் சசிகலா மீது புகார் தராதது ஏன்?- திருமாவளவன் கேள்வி

செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (16:03 IST)
கடந்த சனிக்கிழமை டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி.திருச்சி சிவாவுக்கும், அதிமுக எம்.பி.சசிகலா புஷ்பாவுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சசிகலா புஷ்பா நடந்து கொண்டதால் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.மாநிலங்களவையில் நேற்று சசிகலா புஷ்பா பேசியபோது, ஜெயலலிதா தன்னை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாகவும், அறைந்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்தார்.



 

இந்நிலையில் திமுக எம்.பி சிவாவை சசிகலா புஷ்பா தாக்கிய விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியபோது,

டெல்லி விமான நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் திமுக எம்.பியை, அ.தி.மு.க பெண் உறுப்பினர் தாக்கினார் என்ற செய்தி அதிர்ச்சி அளித்தது. பொது இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்கிற நாகரீக வரம்புகளை மீறி அவர் செயல்பட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் அவர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார் என்றாலும் அது தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்காதது ஏன்? தி.மு.க தரப்பில் அவர் மீது புகார் கொடுக்காததும் வழக்கு பதிவு செய்யாததும் ஏன் என்றும் புரியவில்லை என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்