ஆதார் அட்டைகளை மூட்டை கட்டிவைத்த தபால்காரர்

சனி, 20 டிசம்பர் 2014 (21:23 IST)

ஓய்வுபெற்ற தபால்காரர் ஒருவர் பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டிய ஆதார் அட்டைகளை மூட்டை கட்டி வைத்துள்ளார்.
 

தற்போது நாடு முழுவதும் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறுகிறது. அடையாள அட்டை பதிவுக்கு பின் பதிவு அலுவலர்கள் இன்னும் 3 மாதத்தில் பொதுமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை கொடுக்கப்படும் என அலுவலக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி 24ஆவது வார்டுக்குட்பட்ட குத்தூஸ்புரம் ஓம் சக்தி கோவில் வீதியில் தபால் ஊழியரான சுப்பிரமணி என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்துள்ளார். கடந்த 30–6–2013 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு அவர் தான் குடியிருந்த வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார்.

வெகுநாட்களாக சுப்பிரமணி வராததால் வீட்டின் உரிமையாளர் அவரை தொடர்பு கொண்டார். அதன் பின்னரும் சுப்பிரமணி திருப்பூர் வரவில்லை. எனவே வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணி தங்கியிருந்த வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு ஒரு மூட்டை இருந்தது.
 

அந்த மூட்டையை அவிழ்த்து பார்த்த பொழுது, அதில் 500க்கும் மேற்பட்ட ஆதார் அடையாள அட்டைகளும், 500க்கும் மேற்பட்ட தபால்களும் இருந்துள்ளன. அதிர்ச்சி அடைந்த அவர் திருப்பூர் தலைமை தபால் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
 

தகவலின் பேரில் விரைந்து வந்த தலைமை தபால் நிலைய கண்காணிப்பாளர் எழில் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் ஆதார் அடையாள அட்டைகளை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்