மாணவியை பாதி வழியில் இறக்கிவிட்ட விவகாரம்- அரசு பேருந்து நடத்துனர் இடைநீக்கம்

வியாழன், 11 மே 2023 (15:39 IST)
நெல்லை மாவட்டத்தில் பறை இசைக்கருவியை எடுத்து வந்த மாணவியை பாதி வழியில் இறக்கிவிட்ட அரசுபேருந்து  நடத்துனரை  சஸ்பெண்ட் செய்து அரசு போக்குவரத்து கழக மண்டல இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ரஞ்சிதம். இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

கல்லூரியில் நடக்கும் கலை நிகழ்ச்சியையொட்டி சிவங்கங்கையில் இருந்து  பறை உள்ளிட்ட இசைக்கருவிகளை அவர் எடுத்து வந்துள்ளார்.

கல்லூரியில் இசை நிகழ்ச்சசி முடிந்த பின், இசைக்கருவிகளை தன் சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல வேண்டி,  நெல்லையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில், மதுரை பேருந்தில் ஏறியுள்ளார்.

அப்பேருந்தில் இசைக்கருவிகளை எடுத்துச் செல்ல நடத்துனர் அனுமதி வழங்கியிருந்த நிலையில்,  மாணவி கொண்டு வந்த பறை இசைக்கருவிகளைப் பற்றி நடத்துனர் அவதூறாகப் பேசியதுடன், மாணவியை பாதிவழியில் வண்ணாரப்பேட்டையில் இறக்கிவிட்டுள்ளார்.

மாணவிக்கு சிலர் உதவி செய்து வேறொரு பேருந்தில் மதுரைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து எழுந்த புகாரை அடுத்து, அப்பேருந்து எத்தனை மணிக்கு புறப்பட்டது என்பதைக் கண்டறிந்து, மாணவியை பாதி வழியில் இறக்கிவிட்ட அரசுபேருந்து  நடத்துனரை  சஸ்பெண்ட் செய்து அரசு போக்குவரத்து கழக மண்டல இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அந்த நடத்துனரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்