குழந்தை திருமணம் நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை: மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை..!

சனி, 11 மே 2024 (10:44 IST)
குழந்தை திருமணம் நடத்துவது கண்டறியப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
தென்காசி மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் குழந்தை திருமணம் அதிகம் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
தென்காசி மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை உடன் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அவர் தனது எச்சரிக்கை அறிக்கையில் கூறியுள்ளார்.  
 
மேலும் குழந்தை திருமணம் தொடர்பான புகார்களை 181, 1098 மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பெண்களுக்கு திருமண வயது 18 வயது என்றாலும் பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்பி அவர்கள் தங்கள் சொந்தக்காலில் நின்ற பிறகுதான் திருமணம் நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் இன்னும் சில கிராம பகுதிகளில் 15 அல்லது 16 வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுத்து விடுவதை அடுத்து மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேபோல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் குறிப்பாக தமிழக அரசு இந்த எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்