நாளை அரசு கல்லூரிகளில் அட்மிசன் கலந்தாய்வு! – என்னென்ன ஆவணங்கள் அவசியம்?

வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (08:39 IST)
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1.20 லட்சம் மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்வதற்கான காலியிடங்கள் உள்ளது. சமீபத்தில் +2 மதிப்பெண்கள் வெளியான நிலையில் பல மாணவர்கள் அரசு கல்லூரிகளில் பட்டப்படிப்பிற்காக விண்ணப்பித்துள்ளனர்.

4 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் கட்டணம் செழுத்தி, விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்திருந்த 2.98 லட்சம் பேர் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இளங்கலை படிப்புகளான பிஎஸ்சி, பி.ஏ, பி.காம், பி.சி.ஏ, பி.பி.ஏ உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்காக நடைபெறும் இந்த கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது.

இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள உள்ள மாணவர்கள் தங்களது 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், 12ம் வகுப்பு மாற்று சான்றிதழ், ஆதார் கார்டு, வகுப்பு சான்றிதழ் மற்றும் 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு பிரிவில் விண்ணப்பித்திருந்தால் அதற்கான சான்றிதழையும் கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பித்தவர்களில் சிலர் தனியார் கல்லூரிகளில் சேர்ந்திருந்தால் கலந்தாய்வில் அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களுக்கு அந்த இடம் வழங்கப்படும் என்றும், கலந்தாய்வு முடிந்து மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள் தேவைப்பட்டால் அரசு முடிவு செய்து அறிவிக்கும் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்