காசியில் காமராஜருக்கு சிலை… யோகி ஆதித்யநாத்திடம் பாஜகவினர் கோரிக்கை!

வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (13:13 IST)
உத்தர பிரதேச மாநிலம் காசியில் மறைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் காமராசருக்கு சிலை அமைக்க வேண்டும் என தமிழக பாஜகவினர் உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகம் வந்து பிரச்சாரம் செய்த பாஜக முன்னணி தலைவரும் உத்தர பிரதேச முதல்வருமான யோகி ஆதித்யநாத்திடம் தமிழக பாஜகவின் கலை இலக்கியப் பிரிவின் தலைவரான காயத்ரி ரகுராம் அளித்த மனுவில் காசியில் காமராஜருக்கு சிலை அமைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக அவர் அளித்த மனுவில் ‘இந்துக்களின் புனிததலமாக காசி கருதப்படுகிறது. தென் கோடியில் எப்படி ராமேஸ்வரம் புனிதத் தலமாக இருக்கிறதோ, அதுபோல வட இந்தியாவின் காசியும் மிக முக்கியமான புண்ணியஸ்தலமாக இருக்கிறது. இந்த இரு தலங்களையும் இணைக்கும் வகையில் மதுரைக்கும் காசிக்கும் இடையே வாராந்திர நேரடி விமான சேவையை தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருந்தலைவர் காமராஜர் இந்திய அளவில் மிகப்பெரிய தலைவர். இந்திய அரசியலில் நெருக்கடியான காலகட்டத்தில் பிரதமர்களை உருவாக்கியவர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அர்சியல் அமைப்பு சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டுவந்தவர். இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் முக்கியமான தலைவர் காமராஜர். தமிழகத்தில் நாடார் சமுதாயத்தைப் போன்றே இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் பனையேறும் சமுதாயங்களான ஜெய்ஸ்வால், பண்டாரி, அலுவாலியா போன்ற சமுதாயங்களுக்கு பாஜக முக்கியத்துவம் அளிக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் பாஜக மேயர்கள் பலர் ஜெய்ஸ்வால் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கும் தாங்கள், உத்திரப்பிரதேசத்தின் காசி நகரில் காமராஜருக்கு சிலை அமைத்திட வேண்டும். அதற்காக ஆவண செய்ய வேண்டும்.’ எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்