சித்தப்பா !.... நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது – வசந்தகுமாருக்கு தமிழிசை இரங்கல்!

சனி, 29 ஆகஸ்ட் 2020 (15:24 IST)
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்த காங்கிரஸ் கட்சியின் எம்பி வசந்தகுமாரின் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மறைந்த கன்னியாகுமரி எம் பி வசந்தகுமார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தனின் தம்பி. மேலும் தெலங்கானா ஆளுநரும் முன்னாள் தமிழக பாஜக தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜனின் சித்தப்பாவும் ஆவார். இந்நிலையில் வசந்தகுமாரின் மறைவு குறித்து தமிழிசை தனது முகநூல் பக்கத்தில் இரங்கலை வெளியிட்டுள்ளார்.

அவரது இரங்கலில்
’சித்தப்பா !
நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது... என் சிறு வயது முதல் அவருக்கு திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம்... அப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் இரண்டு பேரிடமும் இருந்தது ஆனால் வேறு வேறு பாதையில் பயணித்தோம்...  இயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர இரத்தப்பாசம் இருவரிடமும் உண்டு, தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும்,துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன்...

சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது ,சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது... வசந்த் & கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பலபேருக்கு பணிகொடுத்த தர்மம்கூட காப்பாற்றவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது... கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் ...
கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது... ஆளுநராக இருந்தாலும்
அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்...
-தமிழிசை சௌந்தரராஜன்...’ எனத் தெரிவித்துள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்