நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், இந்த கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையடுத்து, இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பிரமாண்டமாக மகாபலிபுரம் அருகே நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, காவல்துறை அனுமதியும் பெறப்பட்டுள்ள நிலையில், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆண்டு விழாவில் கட்சியின் கொள்கை தலைவர்களின் உறவினர்களை பங்கேற்க செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, காமராஜர் பேத்தி, வேலுநாச்சியார் உறவினர்கள் மற்றும் இரட்டைமலை சீனிவாசன் போன்ற தலைவர்களின் உறவினர்களும் பங்கேற்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. கொள்கை தலைவர்களின் உறவினர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவர்களும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.