ஜூன் 28 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு, வெயிலும் தொடரும்.. வானிலை எச்சரிக்கை!

Mahendran

ஞாயிறு, 22 ஜூன் 2025 (15:17 IST)
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும்   ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதே நிலை தொடரும். ஜூன் 28ஆம் தேதி வரை தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
இன்று முதல் ஜூன் 24 வரை, தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கும். இதனால் அதிக வெப்பம், அதிக ஈரப்பதம் மற்றும் இரவு நேரங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிக வெப்பநிலை நிலவுவதால், சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
 
சென்னையை பொருத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 
 
மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை: இன்றும் நாளையும்  வட மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் 40 முதல் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்