உச்சநீதிமன்ற தீர்ப்பில் குழப்பம்: செந்தில் பாலாஜி விடுதலையாவதில் சிக்கலா ?

Mahendran

வியாழன், 26 செப்டம்பர் 2024 (17:52 IST)
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குழப்பம் இருப்பதாகவும், இதனால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலை ஆகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தீர்ப்பு இன்று காலை வெளியான நிலையில், அதில் நான்கு நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த பிறகுதான் இதில் முடிவு எடுக்க முடியும் என்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி தெரிவித்தார். மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சில குழப்பங்கள் உள்ளதாகவும், "ஜாமீன் உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம்; அமலாக்கத்துறை விசாரணை அதிகாரி முன்பு தாக்கல் செய்யுங்கள்" என்றும் நீதிபதி தெரிவித்தார்.

ஜாமீன் உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிடவில்லை என்றும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். அதற்கு, செந்தில் பாலாஜி தரப்பில், "விசாரணை அதிகாரி முன்பு இந்த நேரத்தில் எப்படி ஜாமீன் உத்தரவாதத்தை தாக்கல் செய்ய முடியும்?" என்று கூறிய நிலையில், இன்று செந்தில் பாலாஜி விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்