அவன் வர மாட்டான்: ரஜினியை ஒருமையில் திட்டிய சு. சுவாமி!

திங்கள், 26 ஜூன் 2017 (17:48 IST)
பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சைக்குறிய வகையில் அடிக்கடி பேசுவார். இந்நிலையில் அவர் தற்போது ரஜினியை ஒருமையில் பேசியுள்ளார்.


 
 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை ஆரம்பம் முதலே சுப்பிரமணியன் சுவாமி எதிர்த்து வருகிறார். தமிழகத்தில் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு ஆதரவு இருந்தாலும் அவர் வருவதற்கு முன்னரே அவர் வெளி மாநிலத்தவர் எனவே அவர் வர கூடாது என எதிர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.
 
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினியை படிக்காதவர் எனவும், 420 எனவும் கடுமையாக வசைபாடி இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
 
இதனையடுத்து இன்று சென்னைக்கு வந்த சுப்பிரமணியன் சுவாமியிடம் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து நிரூபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு தொடர்ந்து பதில் அளித்த சுப்பிரமணியன் சுவாமியிடம் மீண்டும் ரஜினி குறித்து கேள்வி கேட்டனர்.
 
அதற்கு பதில் அளித்த சுப்பிரமணியன் சுவாமி, அது பழங்கதை, அவன் வர மாட்டான் என ஒருமையில் விமர்சித்தார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைவர்களே ரஜினியை புகழ்ந்து பேசும் போது சுப்பிரமணியன் சுவாமி ரஜினியை அவன் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்