ஆசிரியர் அடித்ததில் மனமுடைந்த மாணவன் தீக்குளித்து தற்கொலை

செவ்வாய், 5 ஜனவரி 2016 (19:38 IST)
சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் அடித்ததில் மனமுடைந்த மாணவன், பள்ளி ஆய்வகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் பிரகாஷ் என்ற மாணவர் வீட்டுப் பாடங்களை செய்யாமலும் படிக்காமல் வந்ததாலும் வேதியியல் ஆசிரியர் கோபம் அடைந்து, அந்த மாணவனை அடித்து வகுப்பு அறைக்கு வெளியில் நிறுத்தி வைத்ததாக சொல்லப்படுகிறது. 
 
இதனால் மனமுடைந்த மாணவன் பள்ளி வளாகத்தில் உள்ள ஆய்வகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உள்ளார். இதைப்பார்த்த அருகில் இருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் பிரகாஷ்யை காப்பற்ற முயன்றுள்ளனர். ஆனால், அவரை காப்பற்ற முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் போலீஸாருக்கு தகவல் அளித்து உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதுகுறித்து ஆசிரியர் ஜேம்ஸ் செல்வக்குமாரை போலீஸார் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்