பெண் பயணியிடம் அத்துமீறிய காவல்துறை அதிகாரி பணிமாற்றம்

சனி, 13 ஜூன் 2015 (15:44 IST)
திண்டுக்கல் அருகே ஓடும் பேருந்தில்,  பெண் பயணி ஒருவரிடம்  அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறை அதிகாரி பணி மாற்றம் செய்யப்பட்டார்.
 
திருச்சியிலிருந்து குமுளிக்கு அரசு பேருந்து (TN 58 N 1975) ஒன்று சென்றது. அப்போது, அந்த பேருந்தில், ஆண்கள் மற்றும் பெண்கள் என பலரும் பயணம் செய்தனர். இதில், பெண் பயணி ஒருவரும் அமர்ந்திருந்தார்.
 
அப்போது, அந்த பெண் பயணியிடம், அம்மய நாயக்க நல்லூர் காவல் நிலைய  எஸ்.எஸ்.ஐ. லட்சுமணன், ஆபாசமாக நடந்து கொண்டார்.  இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் பலரும், அந்த காவல்துறை அதிகாரியிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த சம்பவம் அனைத்தும், வீடியோ பதிவாக வெளிவந்து பலரையம் பதைபதைக்க வைத்தது.
 
மேலும், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்றவை மூலம் வெளியாகியும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
இந்த சம்பவத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் கவனத்திற்கு சிலர் கொண்டு சென்றனர். இதனையடுத்து, பெண் பயணியிடம் ஆபாசமாக நடந்து கொண்ட அம்மய நாயக்க நல்லூர் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ. லட்சுமணனை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
 
மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த நிலக்கோட்டை டிஎஸ்பி சுருளியாண்டிக்கு உத்தரவிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்