தென்மாவட்ட ரயில்கள் நாளை முதல் சென்னை வராது! எங்கு நிறுத்தப்படும்? என்ன காரணம்?

Siva

ஞாயிறு, 21 ஜூலை 2024 (09:59 IST)
தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தென்மாவட்ட ரயில்கள் நாளை முதல் சென்னைக்கு வராது என்றும் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜூலை 22 முதல் அதாவது நாளை முதல் ஜூலை 31 வரை சென்னைக்கு வராது என்றும் செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

 நாகர்கோவில் -தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் ஜூலை 22 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரையும், மறுமார்க்கமாக ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரையும் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

எழும்பூர் - மதுரை செல்லும் வைகை விரைவு ரயில், திருச்சி செல்லும் ராக்போர்ட் விரைவு ரயில், காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை செங்கல்பட்டு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

தாம்பரம் -செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் ஜூலை 22, 24, 26, 27, 29, 31 தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து ஜூலை 24, 25, 28, 30 தேதிகளில்  விழுப்புரத்தில் நிறுத்தப்படும்.

மங்களூர்-சென்னை எழும்பூர் விரைவு ரயில் ஜூலை 22 முதல் 31-ஆம் தேதி வரை திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கமாக ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை திருச்சியில் இருந்து புறப்பட்டு மங்களூர் சென்றடையும்.

எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக சேலம் செல்லும் விரைவு ரயில் ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை சென்னை கடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்