கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் - அர்ஜுன் சம்பத் கோரிக்கை!

வியாழன், 30 மார்ச் 2023 (16:46 IST)
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் 13 கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தார், பின்னர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில் "சுதந்திர போராட்ட தியாகி வீரசாவர்க்கரை இழிவாக பேசிய ராகுல்காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
 
சித்திரை திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், இந்துக்களை தொடர்ந்து அவதூறவாக பேசி வரும் திருமாவளவன் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் திமுகவை சேர்ந்தவர் மட்டுமே அறங்காவலர் பதவியில் நியமிக்கப்பட்டு வருகிறார்.
 
ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்களை அறங்காவலராக நியமிக்க வேண்டும், எப்ரல் 14 ல் பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஊழல் பட்டியல் வெளியிடுகிறார், அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலில் இடம்பெறும் திமுக அமைச்சர்களை கைது செய்ய வேண்டும், தமிழகத்தில் லஞ்சம், ஊழலை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெற தென் தமிழகத்தை தனி மாநிலமாக உருவாக்க வேண்டும், கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும், இதற்கு மத்திய, மாநில அரசு வலியுறுத்த உள்ளேன், கச்சத்தீவு முழுக்க முழுக்க கிறிஸ்தவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகிறது" என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்