சிவா மனதில் புஷ்பா - சினிமாவாகும் சசிகலா புஷ்பா வாழ்க்கை

திங்கள், 19 ஜூன் 2017 (13:40 IST)
அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவின் அரசியல் வாழ்க்கை ஒரு திரைப்படமாக தயாராக உள்ளது.


 

 
முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது, அவருக்கு எதிராக எந்த எம்.எல்.ஏவோ, அமைச்சரோ எங்கேயும் கருத்து தெரிவித்தது கிடையாது. அப்படி பேசினால் அடுத்த நிமிடம் அவர் மீது நடவடிக்கை பாயும்.
 
அந்நிலையில், ஜெயலலிதாவும், சசிகலாவும் எனது கன்னத்தில் அறைந்தனர் என பாராளுமன்றத்தில் பகீரங்கமாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் எம்.பி. சசிகலா புஷ்பா. மேலும், திருச்சி சிவா உள்ளிட்ட சிலரோடு அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இன்னும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
 
ஜெ. கூறியும் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யாத அவர், ஜெ.வின் மறைவிற்கு பின் சசிகலாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மேலும் தற்போது அவர் டெல்லியிலேயே வசித்து வருகிறார்.


 

 
இந்நிலையில், இவரின் அரசியல் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கிறார் நடிகரும், பத்திரிக்கையாளருமான வாராகி. இப்படத்தில் இவரே சிவா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சசிகலா புஷ்பா வேடத்தில் நடிகை ஷிவானி குரோவர் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். ஒரு சாதாரண குடும்பத்து பெண் அரசியல்வாதிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆகியோருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு அரசியலில் எப்படி படிப்பாடியாக முன்னேறுகிறார் என்பதே கதை என கூறும் வாராகி, ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக்கூடாது என்பது இப்படம் சொல்லும் எனக் கூறி அதிர வைக்கிறார்.
 
மேலும், இப்படத்திற்கு சட்டரீதியாக எதிர்ப்பு வந்தாலும், அதை சமாளிப்பேன், அனைத்திற்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது எனக்கூறி அதிரடி காட்டுகிறார் வாராகி. நடிகர் விஷால் மற்றும் நாசர் தலைமையில் நடிகர் சங்கம் அமைந்த போது, அவர்களுக்கு எதிராக பல புகார்களை கூறியவர்தான் இந்த வராகி.
 
சசிகலா புஷ்பாவின் வாழ்க்கை சினிமாக உருவாவது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்