சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அவர் பேசினார். "பொதுமக்களின் எதிர்ப்பை திசை திருப்பவே தீர்மானங்கள் போடப்படுகின்றன. நீட் தேர்வை யாராலும் ரத்து செய்ய முடியாது, ஆனால் அதற்கு தீர்மானம் போடுகிறார்கள். கச்சத்தீவு மீண்டும் வராது, பிரதமர் நினைத்தால்தான் நமக்குக் கிடைக்கும். ஆனாலும் தீர்மானங்கள் போடுகிறார்கள். இது போதுமா?" என்று கேள்வியெழுப்பினார்.
"2026-ல் பாஜக, அதிமுக மற்றும் தோழமைக் கட்சிகள் இணைந்து வெற்றி பெறும் எழுச்சி தெரிகிறது. தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் அகில இந்திய தலைமை சொல்வதை பின்பற்றி செயல்பட வேண்டும். தவறான மீம்ஸ் போட்டால், திமுக கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை கைது செய்யும். சமூக வலைத்தளங்களில் இருப்பவர்கள் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்," என்றார்.
"நம் கூட்டணி இறுதியான உறுதியான கூட்டணி என்பதை மறக்கக் கூடாது. இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும். சந்தர்ப்பவாத கூட்டணி என்பது திமுக தலைமையில் உள்ளது. நியாயமான, ஊழலற்ற கூட்டணி என்பது எங்களது நம்பிக்கை. தேசிய ஜனநாயக ஆட்சி வருவதற்காக தயாராக இருக்க வேண்டும்," என்றார்.
"எத்தனை தொகுதிகள், எந்த இடம் என்பதை அமித்ஷா மற்றும் இபிஎஸ் முடிவு செய்வார்கள். எனது அதிகாரம் தொண்டர்களை பாதுகாப்பதுதான். தலைமை எடுத்த முடிவை ஏற்கவேண்டும் என்பதே கட்சி ஒழுங்கு. பூத் அளவிலான பணியை தொடங்கினால், வெற்றி நிச்சயம்," என்று உறுதியுடன் தெரிவித்தார்.