ஜெயலலிதாவை ஆபாசமாக பேசியதாக பிரேமலதா விஜயகாந்த் , பார்த்திபன் எம்.எல்.ஏ. மீது புகார்

திங்கள், 5 அக்டோபர் 2015 (15:52 IST)
கடந்த மாதம் 30ஆம் தேதி அன்று சேலம் மேச்சேரியில் நடைபெற்ற தே.மு.தி.க.பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பார்த்திபன் எம்.எல்.ஏ ஆகியோர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை மிகவும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக சேலம் மாவட்ட கவுன்சிலரும், அ.தி.மு.க. வக்கீலுமான ஏ.பி. மணிகண்டன் இன்று சேலம் மாவட்ட கலெக்டரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.
 
இந்த புகார் மனுவில்  அவர் கூறி இருப்பதாவது :
 
கடந்த மாதம் 30 ஆம்தேதி அன்று மேச்சேரியில் தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழக முதலமைச்சரை மிகவும் ஆபாசமாக கீழ்த்தரமாக அருவருக்கத்தக்க வகையிலும் பேசியுள்ளார்.
 
அவரை தொடர்ந்து தேமுதிகவைச் சேர்ந்த மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் தமிழக முதல்வரை மிகவும் தரக்குறைவாக பேசியதோடு தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியையும் மிகவும் அவதூறாக பேசியுள்ளார். எனவே மேற்கண்ட இருவர் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்