பொங்கல் பரிசுப்பணம் எவ்வளவு? தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

வியாழன், 22 டிசம்பர் 2022 (18:19 IST)
தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழக்கமாக கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு பணம் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூபாய் ஆயிரம் பணம் கொடுக்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம்  தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தை பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி அட்டைதாரர் மற்றும் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 1000 ரூபாய் வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.2356.67 கோடி செலவினம் ஏற்படும்.
 
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2.1.2023 அன்று சென்னையிலும் அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைப்பார்கள்.
 
Edited by siva

வெப்துனியாவைப் படிக்கவும்