ரஜினி அன்றைக்கு செய்த தவறை மறுபடி செய்ய கூடாது! – பொன்னார் அட்வைஸ்!

வியாழன், 12 மார்ச் 2020 (13:33 IST)
ரஜினி 1996ல் செய்த தவறை மீண்டும் செய்துவிடக் கூடாது என முன்னாள் பாஜக எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் எப்போது கட்சி தொடங்குவார் என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த் “கட்சியும், ஆட்சியும் ஒருவர் கையிலேயே இருக்க கூடாது என்றும், அதனால் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்ற திட்டத்தை கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் கட்சியில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க இருப்பதாகவும், தேர்தல் சமயத்தில் மட்டும் பொறுப்பாளர்களை நியமித்து செயல்படலாம் என்றும் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த்தின் இந்த முடிவுகளுக்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. ரஜினியின் முடிவுக் குறித்து பேசியுள்ள தமிழக பாஜக முக்கிய தலைவரும், முன்னாள் எம்.பியுமான பொன்.ராதாகிருஷ்ணன் ”ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் உள்ளது. அன்று 1996ல் ரஜினிகாந்த் செய்த தவறு திமுகவை ஆட்சியில் அமர வைத்தது. ரஜினிகாந்தின் இந்த அரசியல் பிரவேசம் வரவேற்க தக்கதுதான். ஆனால் தனிக்கட்சி என்று கூறும்போது இது சரியான தருணம் அல்ல” என்று கூறியுள்ளார்.

இதனால் ரஜினி தனிக்கட்சி தொடங்கினாலும் கூட பாஜக ரஜினியோடு கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபடும் எண்ணத்தில் இருக்கிறதோ என அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்