கோவை கொலை வழக்கு; இருவரை சுட்டு பிடித்த போலீஸார்! – தொடரும் பரபரப்பு!

புதன், 15 பிப்ரவரி 2023 (10:00 IST)
கோவை நீதிமன்ற வாசலில் இருவரை வெட்டிக் கொன்ற கும்பலை போலீஸார் காலில் சுட்டு பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் கோகுல் மற்றும் மனோஜ். நண்பர்களான இவர்கள் இருவர் மீதும பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. சில நாட்கள் முன்னதாக வழக்கு ஒன்றில் ஆஜராகி கையெழுத்து போடுவதற்காக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது அங்கு அவர்களை சுற்றி வளைத்த கும்பல் ஒன்று அவர்களை கத்தி, அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனோஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பட்டப்பகலில் நீதிமன்றம் முன்னால் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தனிப்படை அமைத்து கொலை செய்த கும்பலை தேடிய போலீஸாருக்கு அவர்கள் குன்னூரில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து அங்கு சென்ற போலீஸார் தப்பி ஓட முயன்ற கொலை கும்பலை சேர்ந்த 7 பேரை கைது செய்தனர்.

ALSO READ: கோவையில் இளைஞர் துடிக்க துடிக்க வெட்டிக் கொலை! – கோர்ட்டு முன்னர் நடந்த கொடூரம்!

பின்னர் அவர்களை குன்னூரிலிருந்து கோவை அழைத்து வந்தபோது இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என கேட்டதால் கௌதம், ஜோஸ்வா என்ற இருவரை கீழே இறக்கி விட்டுள்ளனர். அவர்கள் போலீஸை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

அவர்களை போலீஸ் துரத்தி சென்ற நிலையில் கீழே கிடந்த அரிவாள் ஒன்றை எடுத்து காவலர் யூசுப் என்பவரை கையில் வெட்டியுள்ளனர். இதனால் அவர்களை பிடிக்க போலீஸார் அவர்களது காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் சுருண்டு விழுந்த கௌதம், ஜோஸ்வாவை பிடித்த போலீஸார் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்