சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி..! கஞ்சா வழக்கில் நீதிமன்றம் உத்தரவு..!!

Senthil Velan

திங்கள், 20 மே 2024 (18:00 IST)
கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீஸார் கடந்த 5ம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். அப்போது உடன் சென்ற தேனி போலீஸார், சவுக்கு சங்கரின் காரை பரிசோதனை செய்த போது தடை செய்யப்பட்ட கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 
 
இதையடுத்து தேனி போலீஸார் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக சென்னையில் உள்ள சவுக்கு சங்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் ஆகியவற்றில் தேனி போலீஸார் அதிரடியாக சோதனை மேற்கொண்டார்.

இதனிடையே, சவுக்கு சங்கரை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோரி, தேனி மாவட்ட பி.சி.பட்டி காவல்துறை சார்பில் மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று, நீதிபதி செங்கமலசெல்வன் முன் விசாரணைக்கு வந்தது.

ALSO READ: சத்தீஸ்கரில் பயங்கர விபத்து..! வேன் கவிழ்ந்து 18 பேர் பலி..!!
 
இதற்காக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை, போலீஸார் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மனுவை விசாரித்த நீதிபதி, சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து பெண் காவல்துறையினரின் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்