வினோதமாக நடைபெற்ற பிடாரி மீனாட்சியம்மன் கோவில் தேரோட்டம்!

J.Durai

வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (11:39 IST)
புதுச்சேரி வில்லியனுார் அருகே உள்ள தொண்டமாநத்தம் பிடாரி மீனாட்சியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 7ம் தேதி பிடாரி மீனாட்சி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 
 
ஒவ்வொரு நாளும் இரவு 7:00 அளவில் பிடாரி மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. 
 
தொடர்ந்து பிடாரி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
 
இதனை அடுத்து ஸ்ரீ பிடாரி மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 
 
முக்கிய விழாவான தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது இதனை ஒட்டி கிராமத்தில் ஒவ்வொரு வீட்டு வாசல் முன்பு ஆடுகள் பலியிடப்படும். சாலையில் உள்ள ஆட்டு ரத்தத்தின் மீது தேர் செல்லுவது இந்த கோவிலின் தனிச் சிறப்பாகும்.
 
கோவில் நிர்வாகம் சார்பில் நள்ளிரவில் கோவில் வாசலில் முதன் முதலாக 5 ஆடுகள் பலியிடப்படும். அதனை தொடர்ந்து, கிராம முழுவதும் நுாற்றுக்கணக்கான ஆடுகள் பலியிட்டு, ரத்தம் சாலையில் விடப்படும். 
 
குழந்தை பேறு இல்லாதவர்கள், இக்கோவிலில் அம்மனுக்கு படையலிட்ட ரத்தசோறு சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
 
பிடாரி மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டதை , அமைச்சர் சாய். ஜெ. சரவணன் குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தீபாய்ந்தான் ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.மேலும் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஆலயம் சார்பில் 25 ஆடு மற்றும் 200 கோழி கறிகளால் கம கம வாசனை உடன்  தயார் செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் கிடா விருந்து சுமார் 3000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்க பட்டது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்