தமிழக மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள்! – நடுகடலில் அதிர்ச்சி சம்பவம்!

செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (10:20 IST)
வங்க கடலில் மீன்பிடிக்க சென்ற வேதாரண்யம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவமும் நடந்து வருகிறது.

வேதாரண்யம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 7 பேர் விசைப்படகில் வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து 22 கடல் மைல் தூரத்தில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு 3 பைபர் படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை சரமாரியாக ஆயுதங்கள் கொண்டு தாக்கியதுடன் மீனவர்களின் மீன்வலை, செல்போன், திசைக்காட்டி உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையாலும், கடற்கொள்ளையர்களாலும் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்