மோடியின் காலில் விழுந்து கிடக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்: ப.சிதம்பரம் கடும் தாக்கு!

திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (10:09 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுக மற்றும் தமிழக அரசியல் நிலவரம் காரணமாக பிரதமர் மோடியை டெல்லி சென்று அடிக்கடி சந்திக்கின்றனர். இதனால் இவர்கள் இருவரையும் பின்னால் இருந்து இயக்குவது பிரதமர் மோடிதான் என அரசியல் வட்டாரத்தில் வெளிப்படையாக பேசுகிறார்கள்.


 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுகவின் ஒவ்வொரு விஷயமும் பாஜக எடுக்கும் முடிவில் தான் உள்ளது. பாஜக அதிமுக மூலம் தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது என பல அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் அதிமுகவை இணைக்கும் படலம் டெல்லியில் பாஜக முன்னிலையில் நடந்து வருவதாக பேசப்படுகிறது. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் ஒரே நேரத்தில் டெல்லி சென்றனர்.
 
இதனை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று பொன்னமராவதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விமர்சித்துள்ளார். அப்போது பேசிய அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இருவரும் மோடி காலிலேயே விழுந்து கிடக்கின்றனர் என கூறினார் ப.சிதம்பரம்.

வெப்துனியாவைப் படிக்கவும்