அப்போலோவில் ஜெ.வை பார்க்கவே இல்லை - ஓ.பி.எஸ் பதிலடி

புதன், 3 மே 2017 (15:16 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை சந்திக்கவில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.


 

 
ஜெ.வின் மரணத்தில் மர்மம் நீடித்து வரும் நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்த போது எடுத்த புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும் என கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி இன்று காலை பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
 
மேலும், “அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்படும் புகைப்படம் விரைவில் வெளியிடப்படும். தற்போது அதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறோம். மருத்துவமனையில் ஜெ.விற்கு முறையாக சிகிச்சையே அளிக்கப்பட்டது. சிகிச்சையின் போது உடனிருந்த ஓ.பி.எஸ் தற்போது சிபிஐ விசாரணை கேட்கிறார். சரியான நேரத்தில் ஜெ.வின் புகைப்படம் வெளியிடப்படும். ஜெ.வின் புகைப்படம் வெளியானால் எல்லா உண்மைகளும்  வெளிச்சத்திற்கு வரும். அதன் மூலம் பலரின் முகத்திரை கிழியும்” என அவர் கூறினார்.
 
இதுபற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ் “ அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை பார்க்க எங்கள் யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையையே நாங்கள் நம்பி வந்தோம். எனவே புகழேந்தி கருத்திற்கு பதில் கூற தேவையில்லை” எனக் கூறினார். 
 
அதேபோல், அங்கிருந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி “ புகழேந்திக்கெல்லாம் பதில் கூற முடியாது. அவர் கூறுவது போல், அவரிடம் எந்த புகைப்படமும் கிடையாது” எனக் கூறினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்