கூடுதல் கட்டணத்தை திருப்பிக் கொடுங்கள் : ஆம்னி பஸ் நிர்வாகத்திற்கு தமிழக அரசு செக்

வெள்ளி, 28 அக்டோபர் 2016 (07:58 IST)
தீபாவளியை முன்னிட்டு பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட, கூடுதல் கட்டணத்தை, பயணிகளிடமே திருப்பி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


 

 
தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்தில் பயணிக்க, வழக்காமன கட்டணத்தை விட அதிகப்படியான தொகை வசூலிக்கப்படுவது வழக்கமான ஒன்று.
 
இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
தமிழ்நாட்டில் இயக்கப்படும் ஆம்னி பஸ் கட்டணம் குறித்து கடந்த 19-ந் தேதி மதுரை ஐகோர்ட்டு கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அதில், 2015-16-ம் ஆண்டில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்த கட்டணத்தையே இந்த தீபாவளி பண்டிகைக்கும் 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை வசூலிக்கவேண்டும். 
 
அதுபோல தீபாவளி பண்டிகை காலமல்லாத மற்ற நாட்களிலும், அதாவது இம்மாதம் 26-ந் தேதி வரை மற்றும் நவம்பர் 1-ந் தேதிக்கு மேற்பட்ட சாதாரண நாட்களிலும், 2015-16-ம் ஆண்டில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்த கட்டணத்தையே வசூலிக்கவேண்டும். அதில் மேலும் உயர்வு இருக்கக்கூடாது.
 
27-ந் தேதியில் இருந்து 31-ந் தேதிக்கு உட்பட்ட பண்டிகை கால டிக்கெட்களை பயணிகளிடம் ஆம்னி பஸ் நிர்வாகம் விற்றிருந்தால், பஸ்சில் அந்த பயணி ஏறும் நேரத்தில் கூடுதல் கட்டணத்தை திருப்பித்தர வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அதுமட்டுமல்லாமல், இந்த உத்தரவுகள் எந்த மீறுதலும் இல்லாமல் துல்லியமாக பின்பற்றப்படுகிறதா என்பதை, போக்குவரத்துத் துறை, மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட்டு கூறியுள்ளது.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்