ஜல்லிக்கட்டு நடக்கும் வரை கோக், பெப்சி விற்கமாட்டோம் - வணிகர் சங்கம் அதிரடி

வியாழன், 19 ஜனவரி 2017 (12:03 IST)
ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கிடைக்கும் வரை வெளிநாட்டு கம்பெனிகளின் தயாரிப்பான கோக் மற்றும் பெப்சி வகை குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என தேனி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ளது.


 

 
ஜல்லிக்கட்டு நடைபெறக்கூடாது என 2014ம் ஆண்டு பீட்டா நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையை பெற்றது. அதன் பின் கடந்த 3 வருடங்களாக பொங்கல் திருநாளில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
 
இந்நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட வேண்டும். மேலும், பீட்டா நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். அதன் பின் தமிழகம் எங்கும் உள்ள கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், ஐ.டி. ஊழியர்கள் என பலரும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக அமைதியான வழியில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, மதுரை,திருச்சி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
 
இந்நிலையில், மாணவர்களுக்கு ஆதரவாக வணிகர் சங்க பேரவையும் களத்தில் இறங்கியுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை அவர்கள் அறிவித்துள்ளனர். மேலும், ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கிடைக்கும் வரை வெளிநாட்டு இறக்குமதியான கோக் மற்றும் பெப்சி போன்ற குளிர்பானங்களை விற்பனை செய்யமாட்டோம் என அவர்கள் அறிவித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்