தனியார் பேருந்துகளில் பாடல்கள் ஒளிபரப்ப தடை: அரசு அதிரடி அறிவிப்பு!

ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (08:15 IST)
தனியார் பேருந்துகளில் பாடல்கள் ஒளிபரப்ப தடை: அரசு அதிரடி அறிவிப்பு!
தனியார் பேருந்துகளில் சாதி மற்றும் மதம் சார்ந்த பாடல்கள் மற்றும் வசனங்கள் ஒளிபரப்பக் கூடாது என பேருந்து உரிமையாளர்களுக்கு நெல்லை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
 
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஜாதி ரீதியாக நடந்த கொலை சம்பவங்களை தொடர்ந்து மேற்கொண்டு எவ்வித அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள் வழியாக இயங்கிவரும் தனியார் பேருந்துகளில் ஜாதி மற்றும் மத ரீதியான பாடல்கள் ஒலிபரப்பப்படுவதன் மூலம் அதில் பயணம் செய்யும் பொதுமக்கள் இளைஞர்கள் பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
 
எனவே இதனை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தனியார் பேருந்துகளும் ஜாதி மத ரீதியான பாடல்கள் மற்றும் வசனங்கள் ஒளிபரப்புவது செய்வதை தவிர்க்குமாறு தனியார் உரிமையாளர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது. 
 
இதனை மீறி செயல்படும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்