டெல்லியின் காலில் விழுந்துகிடக்கும் ஓபிஎஸ் ஒரு பச்சை துரோகி?

வெள்ளி, 12 மே 2017 (09:40 IST)
இரண்டாக பிளந்து கிடக்கும் அதிமுகவை இணைக்க இரு அணிகளும் முயற்சி செய்துகிடக்கின்றன. ஆனால் மூன்றாவதாக உருவாகியுள்ள தினகரன் ஆதரவு அணியோ இந்த இணைப்பை கடுமையாக விமர்சிக்கிறது.


 

 
 
அதில் மிகவும் முக்கியமாக கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோர் ஓபிஎஸ் அணியை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். டிடிவி தினகரனுக்கு முழுமையான ஆதரவு அளித்து வரும் இவர்கள் அவரது கைது கண்டித்து கூட்டங்கள் போட்டு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்து பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத் ஓ.பன்னீர்செல்வத்தை பச்சை துரோகி எனவும், டெல்லியில் காலில் விழுந்து கிடக்கிறார் எனவும் சகட்டு மேனிக்கு விமர்சித்துள்ளார்.
 
இரு அணிகளை இணைக்க வேண்டிய அவசியமே இல்லை. அதிமுகவின் பிளவுக்கு மட்டுமல்ல, அது உடைந்துபோவதற்கும், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கும் காரணம் ஓபிஎஸ் தான். இப்படி ஒரு பச்சைத்துரோகத்தைச் செய்தவரைத் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு இந்தக் கட்சியை இனிமேல் நடத்த வேண்டுமா?.
 
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் கட்சியைக் காட்டிக்கொடுத்து டெல்லி ஏகாதிபத்தியத்தின் காலில் விழுந்துகிடக்கிற அவரை நம்பி ஏன் இப்படி ஓர் இணைப்பு முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்