பூட்டிய வீட்டிற்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சிறுவன், சிறுமியின் சடலம்: சென்னை மதுரவாயலில் பரபரப்பு

புதன், 3 ஜூன் 2015 (18:51 IST)
மதுரவாயலில் பூட்டிய வீட்டிற்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இரண்டு குழந்தைகளின் பிணமாக கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை மதுரவாயல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முதல் தளத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து தூர்நாற்றம் வீசியது. இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்துக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் அந்த வீட்டுக்கு வந்தனர். வீடு வெளிப்பக்கமாக பூட்டி இருந்தது. பூட்டை உடைத்து காவல்துறையினர் உள்ளே சென்றனர். அப்போது டி.வி, ஏ.சி, மின்விசிறி ஆகியவை ஓடிக்கொண்டு இருந்தது. படுக்கை அறையில் 14 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடலும், அருகிலேயே 10 வயது மதிக்கத்தக்க ஒரு பையனின் உடலும் அழுகிய நிலையில் காணப்பட்டன. 
 
அவர்களது உடலில் கத்தி குத்து காயங்களும் இருந்தன. இதனால் இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அந்த உடல்களை காவல்துறையினர் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பிணமாக கிடந்தது பிரியதர்ஷிணி, பிரபு என்று தெரிந்தது. இவர்களது தந்தை ரவி. தாயார் மகேஸ்வரி. இருவரும் வழக்கறிஞர்கள். இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். 
 
குழந்தைகள் இருவரும் ரவியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளனர். பிரியதர்ஷிணியும், பிரபுவும் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கின்றனர். 
 
சமீபகாலமாக அவர்கள் இருவரும் பள்ளிக்கு சரியாக செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த 28 ஆம் தேதிக்குப் பிறகு ரவியின் வீடு பூட்டியே கிடந்துள்ளது. தற்போது ரவி, வீட்டில் இல்லை. அவர் எங்கு இருக்கிறார் என்று காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்