தினகரன் ஒரு சாராய ஆலை அதிபர்: சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி

வியாழன், 31 மே 2018 (16:50 IST)
தமிழக சட்டசபை கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏக்கள் இல்லாமல் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டு மானிய கோரிக்கை விவாதத்தில் பேசி வருகின்றனர். 
 
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி 'தினகரன் ஒரு சாராய ஆலை அதிபர் என்றும், அவருக்கு அரசை விமர்சனம் செய்ய தகுதி இல்லை' என்றும் கூறியுள்ளார்.
 
ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவான டிடிவி தினகரன் தினமும் சட்டப்பேரவைக்கு சென்று சில நிமிடங்களில் வெளியே வந்து அரசை விமர்சனம் செய்து வருகிறார். இதுகுறித்து பேசிய அமைச்சர் தங்கமணி, ' அரசை விமர்சனம் செய்தவதற்கு ஒரு தகுதி வேண்டும் என்றும், சாராய ஆலை அதிபர்களுக்கெல்லாம் அந்தத் தகுதியில்லை' என்றும் தெரிவித்தார். 
 
அமைச்சர் தங்கமணியை டாஸ்மாக் அமைச்சர் என்று நேற்று டி.டி.வி.தினகரன் கிண்டலடித்த நிலையில் அவருக்கு பதிலடி தரும் வகையில் தினகரனை சாராய ஆலை அதிபர் என்று தங்கமணி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்