ரஜினி கூறும் அதிசயம் எப்போதும் நடக்காது: ஜெயகுமார் அதிரடி!

செவ்வாய், 19 நவம்பர் 2019 (15:35 IST)
ரஜினி சொல்லும் அதிசயம் தமிழகத்தில் நடக்காது என அமைச்சர் ஜெயக்குமார் ரஜினியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். 
 
ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் வருகையை அதிமுகவினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். குறிப்பாக தமிழகத்தில் வெற்றிடம் நிலவுகிறது என ரஜினிகாந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியபோது, அதற்கு பதிலடியாக ரஜினி என்ன தலைவரா? அவர் வெறும் நடிகர் தான் என முதல்வர் பழனிசாமி கூறினார். 
 
இதனைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் 60 வருடத் திரை வாழ்க்கையைக் கொண்டாடும் விதமாக, உங்கள் நான் என்ற இசை நிகழ்ச்சி சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி,  மேடையில் நிறைய பேர் அரசியல் சார்ந்து பேசினார்கள். தான் தமிழ்நாட்டின் முதல்வர் ஆகமுடியும் என்று எடப்பாடி பழனிசாமி, சில ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். 
 
அவர் முதலமைச்சர் பதவிக்கு வந்ததும், இருபது நாள்களுக்குக் கூட அந்த பதவியில் அவர் இருக்க மாட்டார் என்றும் சொன்னார்கள். அவர் அந்தப் பதவிக்கு வந்தது அதிசயம். நேற்று அதிசயம் நடந்தது, இன்றும் அதிசயம் நடக்கிறது, நாளையும் அதிசயம் நடக்கும் என பேசியிருந்தார். 
 
இதனைத்தொடர்ந்து நமது அம்மா நாளிதழில், கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி, சூப்பர் ஸ்டார் ஆவார் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார் எனவும், முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடி ஒரு ரியல் தலைவர் எனவும் ரஜினியை குறிப்பிட்டு பதிலடி தரப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது அமைச்சர் ஜெயகுமார், ரஜினி சொல்லும் அதிசயம் தமிழகத்தில் நடக்காது.  அதிசயம், அதிர்ஷடம் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, உழைப்பின் மீது தான் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மக்களை சந்திக்கும் தைரியம், தன்னம்பிக்கை எங்களுக்கு உண்டு என பதிலடி கொடுத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்