விஜய்காந்த் உடல்நலத்தோடு இருந்திருந்தால் ஸ்டாலின் காணாமல் போயிருப்பார்: அமைச்சர் சிவி சண்முகம்

வியாழன், 3 அக்டோபர் 2019 (09:32 IST)
விஜயகாந்த் மட்டும் நல்ல உடல்நலத்தோடு இருந்திருந்தால், ஸ்டாலின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்திருக்க முடியாது என்றும் அவர் காணாமல் போயிருப்பார் என்றும் அமைச்சர் சிவி சண்முகம் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சமீபத்தில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நவம்பர் முதல் வாரத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். இதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது. அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் நான் சொல்லிக் கொள்வது இதுதான்.

நம்மை உயர்ந்த பதவிகளில் அமரவைத்து அழகு பார்க்கும் தொண்டனுக்கு நாம் என்ன கொடுத்துள்ளோம். அவர்களை ஒருபோதும் மறக்கக் கூடாது. இதோ கூட்டணியோடு நாம் உள்ளாட்சி தேர்தலை சந்தித்தால், நாம் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம்.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருவதற்கு காரணம், 2011ல் தேமுதிக போட்ட அடித்தளம் தான். அந்த நன்றியை நாங்கள் மறக்க மாட்டோம். இந்த 8 ஆண்டுகாலம் ஆட்சியில் தொடர தேமுதிக தொண்டர்களின் உழைப்பும் முக்கிய காரணம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மிகப்பெரிய உழைப்பாளி. இன்று அவர் நல்ல உடல்நிலையுடன் இருந்தால், தமிழக அரசியல் வேறு மாதிரியாகி இருக்கும். எழுதி வைத்து பேசும் மு.க.ஸ்டாலின் எல்லாம், இன்று அடையாளம் தெரியாமல் போயிருப்பார்.

இவ்வாறு அமைச்சர் சிவி சண்முகம் பேசினார்

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்