20 தமிழர் படுகொலை விவகாரம் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்கிறார் வைகோ

புதன், 15 ஜூலை 2015 (19:34 IST)
திருப்பதியில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
 

 
கடந்த ஏப்ரல் மாதம் ஆந்திர மாநிலம், திருப்பதி வனப் பகுதியில் 20 தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும், இந்தப் படுகொலைக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
 
இந்த படுகொலை சம்பவத்திற்கு, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், ஆந்திர மாநிலம், திருப்பதி வனப் பகுதியில் 20 தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக மதிமுக தலைமையகம் தாயகத்தில மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தைச் சார்ந்த ஹென்றி திபேன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 
இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், முதலமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்திக்க நேரம் ஒதுக்கி தரக் கோரி வைகோ கடிதம் எழுதியுள்ளார். 
 
இந்தக் கூட்டத்தில் மதிமுகப் பொதுச் செயலாளர் வைகோ, மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க நிர்வாகி ஹென்றி திபேன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சி நிறுவனர் ஜவாஹிருல்லா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்