டைபாய்டு காய்ச்சலை பேய் என நம்பி மகளின் மரணத்துக்குக் காரணமான தந்தை!

சனி, 20 பிப்ரவரி 2021 (10:47 IST)
ராமநாதபுரம் அருகே மகளுக்கு டைபாய்டு காய்ச்சல் வந்த நிலையில் அவருக்கு பேய் பிடித்துள்ளதாக நம்பி அவர் உயிரிழக்கக் காரணமாக இருந்துள்ளார் தந்தை ஒருவர்.

ராமநாதபுரம் மாவட்டம் கோரவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வீர செல்வம். விவசாயியான இவரின் மனைவி கவிதா  9 ஆண்டுகளுக்கு முன்பே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவருக்கு கோபிநாத் மற்றும் தாரணி என இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் வீட்டில் தொடர்ச்சியாக கால்நடைகள் இறந்ததை அடுத்து இறந்து போன மனைவிதான் வந்து பேயாக தொல்லை செய்கிறார் என்று நம்பி குடும்பத்தோடு மனைவியின் கல்லறைக்கு சென்று வழிபட்டு வந்துள்ளார்.

அப்போதில் இருந்து தாரணிக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை குன்றியுள்ளது. அதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மனைவிதான் பேயாக வந்துள்ளார் என்று கூறி பேயோட்டும் நபர்களிடம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பேயோட்டுபவரின் கொடூரமான தாக்குதல்களால் தாரணிக்கு மேலும் உடல்நிலை மோசமாகியுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்த போது ரத்தப் பரிசோதனையில் டைபாய்டு காய்ச்சல் எனத் தெரியவந்துள்ளது.

ஆனால் மறுமுறை பேயோட்டுபவரிடம் சென்று மந்திரித்தால் காய்ச்சல் சரியாகிவிடும் என்று வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் அன்றிரவே தாரணிக் காய்ச்சல் அதிகமாகி உயிரிழந்துள்ளார். தந்தையின் மூட நம்பிக்கையால் மகள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்