இளைஞரைக் கட்டி வைத்து கொடூரமாக அடித்த கும்பல்…. இணையத்தில் வெளியான வீடியோ!

வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (08:31 IST)
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் என்ற இளைஞர் பணத்தை திருடிவிட்டதாக 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரைக் கட்டிவைத்து அடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ராகுல் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் பணத்தைத் திருடிவிட்டதாக குற்றம் சாட்டி அவரது கண்ணைக் கட்டி மரக்கட்டையால் பலமாக தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஐந்து பேர் கொண்ட அந்த கும்பலில் இருவர் ராகுலை மரத்தோடு அழுத்திப் பிடித்துக்கொள்ள ஒருவர் மரக்கட்டையால் மாறி மாறி ராகுலின் பின்பகுதியில் சரமாரியாக தாக்குகிறார். வலிப் பொறுக்க முடியாத ராகுல் அவர்களிடம் கெஞ்சியும் அவர்கள் விடவில்லை. பின்னர் அவரை தரையில் படுக்க வைத்து காலிலும் இடுப்புக்கு கீழும் கடுமையாகத் தாக்குகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் பணமே திருடி இருந்தாலும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்காமல் இப்படி நடந்து கொண்டவர்களை போலீஸார் கைது செய்யவேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அவர்களால் தாக்கப்பட்ட ராகுல் வலி பொறுக்க முடியாமல் எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்று இப்போது தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்