ரஜினி கழுவுற மீனில் நழுவுற மீன்! – கே.எஸ்.அழகிரி கருத்து

திங்கள், 27 ஜனவரி 2020 (10:15 IST)
ரஜினி பாஜக வலையில் சிக்க மாட்டார் என கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

துக்ளக் விழாவில் ரஜினி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடங்கி சமீப காலமாகவே அதிகமாக அவர் குறித்தே அரசியல் வட்டாரங்களில் பேச்சாக உள்ளது. அதிமுக அமைச்சர்கள் பலர் பெரியாரை விட்டுக்கொடுக்காமல் பேசியிருந்தனர். ரஜினியின் இந்த பேச்சு அவர் பாஜக நிலைபாட்டில் இருப்பதை காட்டுவதாக பலர் பேசிக் கொண்டனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ”பெரியார் ஒரு சமூக சீர்திருத்தவாதி. ரஜினிகாந்த் பாஜகவுக்கு சார்பாக இருப்பதை மறுக்க முடியாது. பெரியாரை விமர்சித்த ரஜினி அதே துக்ளக் பாபர் மசூதி இடிப்பின்போது பாஜகவை விமர்சித்ததை ஏன் தெரிவிக்கவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ”ரஜினிகாந்த் கழுவுற மீனில் நழுவுற மீன். பாஜகவின் வலையில் அவர் சிக்க மாட்டார்” என்றும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்