தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற கருணாஸ்: எச்சரித்த போலீஸ்!

ஞாயிறு, 15 ஜனவரி 2017 (16:21 IST)
நடிகரும் திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதால் அவரை போலீசார் தடுத்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி எச்சரித்து அனுப்பினர்.


 
 
முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், தமிழக கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ. தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி ஆகியோர் நேற்று மதுரை பழங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
 
இதில் பேசிய கருணாஸ், இன்று சிவகங்கை மாவட்டம் பணங்காலி பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி இன்று, சிவகங்கை மாவட்டம் பணங்காலி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் அங்கு வந்த காவல் துறையினர் நடிகர் கருணாஸிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரிடம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக்கூடாது என்று அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்