திமுக பக்கம் சாயும் கருணாஸ் - விரைவில் கைது?

வெள்ளி, 1 ஜூன் 2018 (10:50 IST)
சுயேட்சை எம்.எல்.ஏ.வான கருணாஸ் ஏதேனும் ஒரு வழக்கில் விரைவில் கைது செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
 
நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை எனும் இயக்கத்தை நடத்தி வருகிறார்.  கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இரட்டை இலை சின்னத்திலேயே அவர் போட்டியிட்டு திருவாடணை தொகுதி எம்.எல்.ஏ ஆனார்.
 
ஜெ.வின் மறைவிற்கு பின் அவர் சசிகலா அணியுடன் நெருக்கம் காட்டினார். கூவத்தூர் விடுதியிலும் தங்கியிருந்தார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசை தொடர்ந்து விமர்சித்தும் வந்தார். 

 
குறிப்பாக சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட மாதிரி சட்டசபை கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டு அதிமுகவை விமர்சித்தார். இதனால், அவர் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
எனவே, அவரை ஏதேனும் ஒரு வழக்கில் கைது செய்யலாம் என அதிமுக தரப்பு ஆலோசிக்க தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்